அதிமுக கிளை செயலாளர் கொலை: 6 பேர் கைது; திமுக பிரமுகர் மீது வழக்கு

அதிமுக கிளை செயலாளர் கொலை: 6 பேர் கைது; திமுக பிரமுகர் மீது வழக்கு
Updated on
1 min read

பெரம்பலூர்/சென்னை: பெரம்பலூர் மாவட்டம் வேலூர்கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(50). பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60). அதிமுக கிளைச் செயலாளர். கடந்த மார்ச் 24-ம் தேதி ராமசாமி மனைவிசெல்லம்மாள், சுப்பிரமணி மனைவி பிச்சாயி ஆகியோருக்கிடையே குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வந்தனர்.

இதில் ராமசாமிக்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் (47), சுப்பிரமணியிடம் தகராறு செய்துள்ளார். கடந்த 7-ம் தேதி வேலூர் கிராமத்தில் நடந்த அன்னப் படையல் நிகழ்ச்சியின்போது, செந்தில்குமார், சுப்பிரமணி தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த அதிமுக கிளைச் செயலாளர் சுப்பிரமணி, திமுகவை சேர்ந்த கண்ணன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து சுப்பிரமணி மனைவி பிச்சாயி கொடுத்த புகாரின்பேரில் திமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் (47), அவரது மகன் விக்னேஷ்வரன், உறவினர்கள் செல்வம்(24), சரவணன்(23), அமுதா(42), 17 வயது சிறுவன் ஆகிய 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், செந்தில்குமாரைத் தவிர மற்ற அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல, திமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், சுப்பிரமணி தரப்பைச் சேர்ந்த நாகேந்திரன் (30), பிச்சாயி, சுரேஷ், பெரியசாமி, சகாதேவன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, நாகேந்திரனை கைது செய்தனர்.

பழனிசாமி இரங்கல்: அதிமுக பொதுச் செயலாளர்பழனிசாமி நேற்று வெளியிட்டஅறிக்கையில், "திமுகவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தசுப்பிரமணி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in