சென்னை | குட்கா வியாபாரிகள் 73 பேர் கைது

சென்னை | குட்கா வியாபாரிகள் 73 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னையில் குட்கா வியாபாரிகள் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து காவல் நிலைய போலீஸாரும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில், தனிப்படையினர் கடந்த 1 முதல் 7ம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் குட்கா, மாவா உள்ளிட்டவைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 73 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 54.54 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 19.48 கிலோ மாவா மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த குற்றச்சாட்டில் தொடர்புடையதாக கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையில் 22 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in