Published : 08 May 2024 05:47 AM
Last Updated : 08 May 2024 05:47 AM

சவுக்கு சங்கரை கஞ்சா வழக்கில் கைது செய்தது தேனி காவல்துறை: சேலத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

சவுக்கு சங்கர்

கோவை: சென்னையைச் சேர்ந்த ‘சவுக்கு’ என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரியான சங்கர், நேர்காணல் ஒன்றில், காவல்துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக புகார்கள் எழுந்தன.

அதன் அடிப்படையில், கோவைமாநகர சைபர் கிரைம் காவல்துறையின் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில், 4 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிந்து கடந்த 4-ம் தேதி காலைதேனியில் உள்ள விடுதியில் கோவை தனிப்படை காவல்துறை யினர் கைது செய்தனர்.

மேலும், அவருடன் விடுதியில் தங்கியிருந்த ராஜரத்தினம்(42), ஓட்டுநர் ராம்பிரபு(28) ஆகியோரையும் தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரித்தனர். அவர்களது காரில் கஞ்சா இருந்ததை கண்டறிந்த போலீஸார் அதை பறிமுதல் செய்ததோடு, அவர்கள் இருவரையும் கஞ்சா வழக்கில் கைது செய்தனர். அப்போது சவுக்குசங்கர் மீதும் வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில், பழனிசெட்டி பட்டி காவல்நிலைய அதிகாரிகள் நேற்று கோவை மத்திய சிறைக்குச்சென்று, அங்கு அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை, கஞ்சா வழக்கிலும் மீண்டும் கைது செய்தனர்.

இதற்கிடையே, கோவை சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கரை5 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி, கோவை சைபர் கிரைம் காவல்துறையினர், கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.4-ல் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுநீதித்துறை நடுவர் சரவணபாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை நாளைக்கு (மே 9) தள்ளிவைத்தார். அதேபோல், சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கோரி அவரது தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தாக்கல்செய்த மனு மீதான விசாரணையை 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மத்திய சிறையில்சவுக்கு சங்கரை காவலர்கள் தாக்கியுள்ளனர். சிறையில் அவரதுஉயிருக்கு ஆபத்து உள்ளது. சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க வேண்டும், சவுக்கு சங்கரை, நீதிபதி நேரில் பார்க்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளோம்’’ என்றார்.

இதற்கிடையே, இந்த மனுவின் அடிப்படையில் விசாரிக்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவின் வழக்கறிஞர் சண்முகவேலு உட்பட 3 பேர், மருத்துவர்கள் 2 பேர் கோவை மத்தியசிறைக்கு நேற்று சென்று சவுக்குசங்கரிடம் விசாரித்தனர்.

சேலத்தில் 5 பிரிவுகளில் வழக்கு: இந்நிலையில், சேலம் சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் கீதா, சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீஸில் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தார். இதையடுத்து, சவுக்கு சங்கர்மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல்தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம்மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு என 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அதேபோல், பெண் பத்திரிகையாளர் ஒருவரை சவுக்கு சங்கர் இழிவாகப் பேசியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்றுமற்றொரு வழக்கை பதிவுசெய்தனர்.

இந்நிலையில், சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரிஅவரது தாயார் சார்பில் சென்னைஉயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x