தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்ட செவிலியர்: உயிரிழந்த குழந்தை உடல் எழும்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்ட செவிலியர்: உயிரிழந்த குழந்தை உடல் எழும்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
Updated on
1 min read

சென்னை: திருமணம் ஆகாமலேயே காதலன் மூலம் கர்ப்பமான செவிலியர், தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டார். அப்போது குழந்தை வெளியே வராததால் கத்தியால் குழந்தையின் உடல் பாகங்களை வெட்டி எடுத்தார். இதில், குழந்தை இறந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண், சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஓராண்டாக செவிலியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் அந்த மருத்துவமனையின் ஊழியர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கும் சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 29 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன் - மனைவி போன்று உறவிலும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கர்ப்பமான செவிலியர், இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 5.20 மணியளவில் அவருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. பிரசவ வலி என்பதை உணர்ந்த அவர், குடியிருப்பு குளியலறைக்குச் சென்று வலியால் துடித்துள்ளார். ஆனால், குழந்தை வெளியே வர தாமதமாகி உள்ளது.

இதனால், செய்வது அறியாது தவித்த அவர், குழந்தையின் கழுத்தை, அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால் வெட்டி வெளியேஇழுத்துள்ளார். மேலும், குழந்தையின் முட்டிக்கு கீழே இரண்டு கால்களையும் வெட்டியுள்ளார். அப்போது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டு அங்கேயே சரிந்துள்ளார்.

நீண்ட நேரத்துக்கு பிறகு இதை கவனித்த மருத்துவக் குடியிருப்பு ஊழியர்கள், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அந்த செவிலியரையும், துண்டு துண்டாக்கப்பட்ட குழந்தை உடலையும் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிசிச்சை பிரிவில் செவிலியர் சிகிச்சை பெற்று வருகிறார். மாம்பலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in