Last Updated : 01 May, 2024 05:07 AM

1  

Published : 01 May 2024 05:07 AM
Last Updated : 01 May 2024 05:07 AM

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட நிர்மலா தேவி.

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2.42 லட்சம் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பேராசிரியை நிர்மலா தேவி (52). அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக இவரைஅருப்புக்கோட்டை நகர் போலீஸார் கடந்த 2018 ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.

இதில் தொடர்பு உள்ளதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேருக்கும் ஓராண்டு சிறைவாசத்துக்கு பிறகு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் 1,160 பக்கங்கள் கொண்ட முதல்கட்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் கடந்த 2018 ஜூலை 13-ம் தேதி தாக்கல் செய்தனர். தொடர்ந்து 2018 செப்டம்பர் 7-ம் தேதி 2-வது கட்டமாக மேலும் 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பின்னர், இந்தவழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும், புகார்தாரர்களான கல்லூரி மாணவிகள், அவர்களது பெற்றோர், அருப்புக்கோட்டை கல்லூரியின் நிர்வாகிகள், பேராசிரியர்கள், மதுரை காமராசர் பல்கலைக் கழக உயர் அலுவலர்கள், பேராசிரியர்கள் என 104 பேரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

கடந்த 29-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அரசுதரப்பில் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுதலை செய்தது.

நிர்மலா தேவியின் வழக்கறிஞர் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் கோரியதால் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய விசாரணையில், நிர்மலா தேவியின் வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் வாதிடும்போது, ‘‘குற்றம் சாட்டப்பட்டவர் தனது தரப்புவாதத்தை தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் புகார்தாரர்கள், சமூகத்தில் எந்த வகையிலும் ஒடுக்கப்படவும் இல்லை, ஒதுக்கப்படவும் இல்லை.

அவர்கள் சராசரி மனிதர்களாகவே இயல்பாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது வாதத்தை முன்வைத்த அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், ‘‘யாரும் பாதிக்கப்படவில்லை, ஆனாலும் பாதிக்கப்படுவார்கள் என்றுதான் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்தவழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகளில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான சில உத்தரவுகளை வழங்கி இருக்கிறது. அதன் அடிப்படையில், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து, ஐபிசி 370 (1)-க்கு7 ஆண்டுகள், பிரிவு 370 (3)-க்கு10 ஆண்டுகள், பிரிவு 5(1)க்கு5 ஆண்டுகள், பிரிவு 9-க்கு 10 ஆண்டுகள், பிரிவு 67-க்கு 3 ஆண்டுகள்என மொத்தமாக 35 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2.42 லட்சம்அபராதமும் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.

தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளதால், 10 ஆண்டு காலம் அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவி அடைக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x