

சென்னை: வில்லிவாக்கம் அருகே இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் நேற்று மதியம் செங்குன்றம் வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த 7 பேர் கும்பல் வழிமறித்து சரத்குமாரை சரமாரியாக வெட்டியது. இதில், நிலை குலைந்து இருசக்கர வாகனத்திலிருந்து குதித்து ஓட்டம் பிடித்த அவரை கும்பல் விரட்டிச் சென்று விரட்டியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
போலீஸார் சம்பவ இடம் விரைந்து சரத்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சரத்குமார் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் மூர்த்தி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். கொலைக்கான காரணம், கொலையாளிகள் யார், என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கொலை செய்யப்பட்ட சரத்குமார் மீது பெரவள்ளூர் காவல் நிலைய பகுதியில் 2019-ல் ஜானகிராமன் என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.