Published : 27 Apr 2024 06:36 AM
Last Updated : 27 Apr 2024 06:36 AM

ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியர் 2 பேர் கைது

ரமேஷ் பாபு, கந்தசாமி, ஜோதிமணி

ராமநாதபுரம்/ஸ்ரீ வில்லிபுத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த முகம்மது பிலால் என்பவர், தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்கக் கோரி, தேவிபட்டினம் மின் வாரிய அலுவலகத்தில் மனு செய்தார்.

பின்னர், மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் ரமேஷ்பாபுவை அணுகிய போது, மின் கம்பிகளை மாற்ற ரூ.9ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முகம்மது பிலால், ராமநாதபுரம்மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

இந்நிலையில், போலீஸார் அறிவுறுத்தியபடி ரசாயனம் தடவிய பணத்தை தேவிபட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபுவிடம் நேற்று முகம்மது பிலால் கொடுத்தபோது, அதில் ரூ.3,000 பெற்றுக்கொண்டு, மீதி ரூ.6 ஆயிரத்தை வயர்மேன் கந்தசாமி என்பவரிடம் கொடுக்கச் சொல்லியுள்ளார். அவரும் கொடுத்துள்ளார்.

ரமேஷ் பாபு, கந்தசாமி ஆகியோர் லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நகரமைப்பு ஆய்வாளர் கைது: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் வாசுதேவன்(47). ஆட்டோ ஓட்டுநர். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நல்ல குற்றாலத் தெருவில் புதிதாக வீடு கட்டுவதற்காக, கட்டிட வரைபடத்துக்கு அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அவரிடம் கட்டிட வரைபட அனுமதிக்கு ஒப்புதல் வழங்க, நகரமைப்பு ஆய்வாளர் ஜோதிமணி(56) ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து வாசுதேவன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் அறிவுறுத்தலின் பேரில், வாசுதேவன் நேற்று காலை ரசாயனப் பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை ஜோதிமணியிடம் கொடுத்தார். அப்போது ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் ஜோதிமணியை கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x