தேர்தல் முன்விரோத தகராறில் இரட்டை கொலை: 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 23 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் முன்விரோத தகராறில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அடுத்த கண்ணாரம்பட்டு பகுதியை சேர்ந்தவர் குலசேகரன்(59). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆதி என்பவரது குடும்பத்துக்கும் புறம்போக்கு இடத்தை அனுபவிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

கடந்த 2001-ல் நடைபெற்ற பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், அதே பகுதியை சேர்ந்த நக்கீரன், சேகர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சேகர் தரப்புக்கு ஆதரவாக குலசேகரன் வேலை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த நக்கீரன்(49), அவரது ஆதரவாளர்களான வழக்கறிஞர் கோவிந்தராஜ்(65), தமிழ்மணி(47), சிவபூஷ்ணம்(65), புகழேந்தி(78), மணவாளன்(75), ராஜேந்திரன்(65), குமரவேல்(52), மார்க்கண்டேயன்(65), சுதாகர்(46), பழனிவேல்(58), முரளி(44), தமிழ்ச்செல்வன்(55), அருள் (44),கனகராஜ் (75), மற்றொரு தமிழ்ச்செல்வன் (47), சிவநாதன்(45), பிரபு, காளி பசுபதி, அர்ஜுனன்(75), மணி(78), பாரி(41), பார்த்திபன்(45), சபரிநாதன்(50), கண்ணன்(65), மாதவன்(50) ஆகிய 26 பேர் சேர்ந்து, குலசேகரனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தடுக்க வந்த அவரது உறவினர் காத்தவராயன்(70) என்பவரையும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குலசேகரன், காத்தவராயன் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக குலசேகரனின் சகோதரர் திருநாவுக்கரசு, திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில், 26 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

இதில், விசாரணையின்போது, பழனிவேல், தமிழ்மணி, அருள், மோகன், அர்ஜுனன், கண்ணன் ஆகிய 6 பேர் உயிரிழந்துவிட்டனர்.

தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ராஜசிம்மவர்மன் நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிரிழந்த 6 பேர் நீங்கலாக, மற்ற 20 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, 20 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in