

சிவகங்கை: காளையார்கோவில் அருகே 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பெரியநரிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவர் முருகன் (62). அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படித்த 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து முருகனை கைதுசெய்தனர். இது தொடர்பான வழக்கு, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ், குற்றம்நிரூபிக்கப்பட்ட முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சில பிரிவுகளில் தலா5 ஆண்டுகள் வீதம் 45 ஆண்டுகள் சிறையும், ஒருபிரிவில் 2 ஆண்டுகள் சிறையும், ரூ.69 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும்,தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
சிறுமிகளுக்கு இழப்பீடு: தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு ரூ.7 லட்சம், மற்றொரு சிறுமிக்கு ரூ.6 லட்சம், மேலும் 4 சிறுமிகளுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.29 லட்சம் இழப்பீடாக வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.