Published : 22 Apr 2024 06:20 AM
Last Updated : 22 Apr 2024 06:20 AM

சென்னை | வேலைக்கு செல்லாததை கண்டித்த மாமியாரை கொலை செய்த மருமகன் கைது

புஷ்பராஜ்

சென்னை: வேலைக்கு செல்லாததை கண்டித்த மாமியார் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை மாதவரம் கண்ணன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வசந்தி (58). இவர், தனது மகள் ஜான்சி வீட்டில் வசித்து வந்தார். ஜான்சி, அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி செய்து வருகிறார். மருமகன் புஷ்பராஜ் (48) வேலைக்கு செல்லாமல் எந்நேரமும் ஊர் சுற்றி திரிந்துள்ளார்.

மகள் வேலைக்கு செல்லும் நிலையில், மருமகன் வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்ததால் கோபமடைந்த வசந்தி, மருமகனை அடிக்கடி கண்டித்துள்ளார். இதனால், மாமியார் - மருமகன் இடையே எந்நேரமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வசந்தி வீட்டில் இருந்தபோது, புஷ்பராஜ் அங்கு வந்துள்ளார். மருமகன் வேலைக்கு செல்லாததை சுட்டிக் காட்டி வசந்தி கண்டித்துள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ், அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் மாமியாரின் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்.

தாக்குதலில் காயமடைந்த வசந்தி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மாதவரம் போலீஸார், வசந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த புஷ்பராஜை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x