Published : 16 Apr 2024 05:57 AM
Last Updated : 16 Apr 2024 05:57 AM

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை; 4 பேருக்கு தலா நான்கு ஆயுள் சிறை தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விஷால் (எ) சோனை முத்தையா, செல்லமுத்து, ஐயப்பன் மற்றும் 3 ஆண்டுகள் தண்டனை பெற்ற செல்வம். படங்கள்: இரா.கார்த்திகேயன்.

திருப்பூர்: திருப்பூரில் தாய், மகன்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தலா 4 ஆயுள் சிறை தண்டனை விதித்துதிருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (49). இவர் மனைவி, மகன், தாய் உள்ளிட்டோருடன் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் உணவகம் நடத்தி வந்தபோது, அந்த உணவகத்தின் எதிரே நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.

இதற்கிடையே, உணவகத்தை வேறு நபருக்கு மோகன்ராஜ் வாடகைக்கு விட்டார். அப்போது அங்குதொழில் செய்துவந்த நபர், இறைச்சி எடுத்ததில் கடன் வைத்ததாக கூறி, உணவகத்தில் இருந்த சிலிண்டரையும், கோழிக் கூண்டுகளையும் வெங்கடேஷ் தூக்கிச் சென்றதால் மோகன்ராஜுடன் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு செப்.3-ம் தேதி மாலை வெங்கடேஷ் மற்றும் இருவர், மோகன்ராஜின் நிலத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இதனை மோகன்ராஜ் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மோகன்ராஜ், அவரது சகோதரர் செந்தில்குமார்(46), மோகன்ராஜின் தாய் புஷ்பவதி(68), சித்தி ரத்தினாம் பாள்(59) ஆகியோரை சரமாரியாக வெட்டிக் கொன்றது.

வழக்கை விசாரித்த பல்லடம் போலீஸார், வெங்கடேஷ்(27), அவருடைய தந்தை ஐயப்பன்(52), செல்லமுத்து(24), தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த விஷால் (எ) சோனை முத்தையா (20), செல்வம்(29) ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில், திருப்பூர்மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதிநேற்று தீர்ப்பளித்தார். இதையொட்டி, 5 பேரும் பலத்த போலீஸ்பாதுகாப்புடன் கோவை மத்தியசிறையில் இருந்து அழைத்து வரப்பட்டனர். வெங்கடேஷ், கால் காயம்காரணமாக ஸ்ட்ரெச்சரில் வந்தார்.

காலில் காயம் காரணமாக ஸ்ட்ரெச்சரில் வந்த
​​​​​​முதன்மை குற்றவாளி வெங்கடேஷ்.

மாவட்ட அமர்வு நீதிமன்றம் நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தனது உத்தரவில், இந்த வழக்கில் வெங்கடேஷ், விஷால் (எ) சோனைமுத்தையா, செல்லமுத்து, வெங்கடேஷின் தந்தை ஐயப்பன் ஆகிய 4 பேருக்கும், 4 கொலைகளுக்காக, 4 ஆயுள் தண்டனைகளும், தலாரூ.1000 அபராதமும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக செல்வத்துக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் தடயங்களை அழித்தலுக்காக 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்தும், மேற்கண்ட தண்டனைகள் அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.இதையடுத்து அனைவரும் கோவைமத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வழக்கறிஞர் கனகசபாபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்திருப்பதால், அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு தரப்பில் நிவாரணம் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் நடந்து 7 மாதங்களுக்குள் 101 சாட்சிகள் பட்டியலிடப்பட்டு, வழக்கு முடிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் வீட்டின் அருகே கைப்பற்றப்பட்ட வீடியோ, பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் இருந்த 2 சிறுவர்களின் சாட்சி ஆகியவை இந்த வழக்கில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டன’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x