Published : 15 Apr 2024 07:00 AM
Last Updated : 15 Apr 2024 07:00 AM

இலங்கை கடல் பகுதியில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 10 பேர் கைது

பிரதிநிதித்துவப் படம்

ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன்பிடிப் படகுகளில் கடத்தப்பட்ட ரூ.107 கோடி மதிப்பிலான 264 கிலோ போதைப் பொருட்களை இலங்கை கடற்படையினர் பறி முதல் செய்தனர்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சர்வதேசக் கடல் பகுதியில் போதைப் பொருட்களைக் கடத்திச் செல்லும் படகுகள் மற்றும் கப்பல்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இலங்கை தென்முனையின் தொன்ட்ராவிலிருந்து250 கி.மீ.தொலைவில் இந்தியப் பெருங்கடலில் சந்தேகத்துக்கிடமான வகையில் இரண்டு மீன்பிடிப் படகுகள் செல்வதை இலங்கை கடற்படையினர் கண்டறிந்தனர். உடனே, ஆழ்கடல் ரோந்துக் கப்பலான சமுத்ரஷாவில் சென்று,அந்தப் படகுகளில் சோதனையிட்டனர்.

அதில் 17 சாக்குகளில் பதுக்கிவைத்திருந்த, 180 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் 84 கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், இருபடகுகளில் இருந்த இலங்கைவாசிகள் 10 பேரைக் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் படகுகளையும், காலி கடற்படை முகாமுக்கு நேற்று கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.107 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x