

சென்னை: மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர் ரூ.200 கோடி ஹவாலா பணப்பரிவர்த்தனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டாரா என்று வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நீலாங்கரையைச் சேர்ந்தவர் வினோத்குமார் ஜோசப். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மலேசியா வழியாக துபாய் நாட்டுக்கு சுற்றுலா பயணியாக புறப்பட்டார்.
மலேசியாவில் குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரித்ததில், அவர் சட்ட விரோத பணப்பரிவர்த்தனைக்காக வந்துள்ளதாக சந்தேகப்பட்ட அதிகாரிகள், அவரை கடந்த 7-ம் தேதி சென்னைக்கு திருப்பி அனுப்பினர். இதுபற்றி சென்னையில் உள்ள வருமானவரித் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையம் வந்த அவரை வருமானவரித் துறை அதிகாரிகள் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். அவர் சில அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேர்தல் செலவுகளுக்காக துபாய், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணப்பரிவர்த்தனையாக சுமார் ரூ.200 கோடியை இந்தியாவுக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்ததாகவும், அமலாக்கத் துறை அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.