சென்னை | மது போதையில் தகராறு இளைஞரை கொன்று புதைத்த நண்பர்கள் 2 பேர் கைது: வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது சடலம் வந்தது

சென்னை | மது போதையில் தகராறு இளைஞரை கொன்று புதைத்த நண்பர்கள் 2 பேர் கைது: வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது சடலம் வந்தது
Updated on
1 min read

சென்னை: பெருங்குடியில் மது போதை தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை பெருங்குடி காமராஜர் நகர் 3-வது தெருவில் வீட்டு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை வீடு கட்டபள்ளம் தோண்டியபோது இளைஞரின் சடலம் ஒன்று கண்டறியப்பட்டது.

அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர், இதுகுறித்து துரைப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்தவர் சென்னை கண்ணகி நகர், சுனாமி குடியிருப்பில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த முத்து (39) என்பது தெரியவந்தது.

சில தினங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதாக அவரதுகுடும்பத்தினர் புகார் தெரிவித்து இருந்தனர். போலீஸார் தேடி வந்த நிலையில், முத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ராஜா, கோவை காளப்பட்டியை சேர்ந்த சந்துரு (22) ஆகியஇருவரை போலீஸார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட முத்து,ராஜா, சந்துரு மூவரும் நண்பர்கள். இவர்கள் கடந்த 24-ம் தேதி இரவு மது அருந்தியுள்ளனர். அப்போது, மதுபோதையில் சந்துருவை முத்து அசிங்கமாக பேசியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சந்துரு, கத்தியால் முத்துவின் முகத்தில் வெட்டியுள்ளார். ராஜாவும் கத்தியால் முத்துவை வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த முத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் இருவரும் சேர்ந்து அருகில்குழி தோண்டி முத்துவின் சடலத்தைபுதைத்துவிட்டு எதுவும் தெரியாததுபோல் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in