

மதுரை: பாஜக மாநிலப் பொருளாதாரப் பிரிவு தலைவராக இருப்பவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் கல்லூரி நடத்தி வருகிறார். கல்லூரியின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். சமீபகாலமாக பாஜக நிர்வாகிகளுடன் நெருக்கமாக இருந்துவந்தார்.
இந்நிலையில், எம்.எஸ்.ஷாவுக்கு எதிராக, 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை திலகர் திடல் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், எம்.எஸ்.ஷா தனது மகளின் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி ஆபாச உரையாடல்களை அனுப்பியதாகவும், மகளை பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுத்து, வெளியூர், உள்ளூர் விடுதிகளுக்கு அழைத்துச் சென்றதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த செயல்களுக்கு தனது மனைவியும் உதவியுள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள் ளார்.
மேலும், புதிய ஸ்கூட்டர், ஆடைகள் வாங்கித் தருவதாக வாட்ஸ் ஆப் மூலம், மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். கடனை அடைத்து விடுவதாகக் கூறி, தனது மனைவியுடன் நெருக்கமாக இருந்த நிலையில், மகளையும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். எனவே, எம்.எஸ்.ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்.எஸ். ஷா மற்றும் மாணவியின் தாய் ஆகியோர் மீது மதுரை மாநகர் மகளிர் போலீஸார் போக்சோ சிறப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள எம்.எஸ்.ஷாவைத் தேடி வருகின்றனர்.