ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

ரஞ்சிதா, தர்ஷன் பாபு
ரஞ்சிதா, தர்ஷன் பாபு
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிரிநகரை சேர்ந்தவர் தர்ஷன் பாபு (30). மென்பொருள் பொறியாளரான இவர், கடந்த 2021-ம் ஆண்டு ரஞ்சிதாவை (24) திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார்.

பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த த‌ர்ஷன் பாபு கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். தொடக்கத்தில் கையில் இருந்த பணத்தை இழந்த அவர், பின்னர் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு ரஞ்சிதா பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் தர்ஷன் பாபு தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என எதிர்பார்த்து அவர், ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடிக்கும் அதிகமாக இழந்தார். கடன் வாங்கிய பணத்தையெல்லாம் சூதாட்டத்தில் இழந்ததால் கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பி செலுத்துமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சித்ரதுர்காவில் இருந்த நிலத்தை விற்று ரூ.70 லட்சம் கடனை அடைத்துள்ளார். மீதமுள்ள ரூ.84 லட்சத்தை திரும்ப தரக்கோரி கடன் கொடுத்தவர்கள் தர்ஷன் பாபுவுக்கும், அவரது மனைவி ரஞ்சிதாவுக்கும் தொல்லை கொடுத்துள்ளனர். கடன் தொல்லை தாங்க முடியாமல் கடந்த 18-ம் தேதி ரஞ்சிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அவரது படுக்கை அறையில் சோதனை நடத்தியபோது 2 பக்க தற்கொலை கடிதம் கிடைத்தது. அதில் ரஞ்சிதா, தனது கணவர் தர்ஷன் பாபு ஐபிஎல் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்தது, குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை, கடன் கொடுத்தவர்களின் மிரட்டல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரஞ்சிதாவின் தந்தை வெங்கடேஷ் கூறும்போது, ‘‘கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி காரணமாகவே ரஞ்சிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார். அரசும் போலீஸாரும் ஐபிஎல் சூதாட்ட கும்பலை ஒழிக்க வேண்டும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in