குமரி தேவாலய வளாக கொலை வழக்கு: பாதிரியார், திமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

குமரி தேவாலய வளாக கொலை வழக்கு: பாதிரியார், திமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
Updated on
1 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரில் தேவாலய வளாகத்தில் உள்ள இல்லத்தில் அரசு ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, பாதிரியார், திமுக முன்னாள் நிர்வாகி உட்பட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திங்கள்நகரை அடுத்த மயிலோட்டில் மிக்கேல் அதிதூதர் தேவாலயம் உள்ளது. இங்குள்ள பாதிரியார் இல்லத்தில் கடந்த ஜனவரி 20-ம் தேதி ஆலய பங்கு பேரவை முன்னாள் நிர்வாகியான சேவியர் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியரான சேவியர் குமார், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவராகவும் இருந்தார்.

கொலை தொடர்பாக திமுக தக்கலை ஒன்றிய முன்னாள் செயலாளர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன் உட்பட 15 பேர் மீது இரணியல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் சரணடைந்த பாதிரியார்ராபின்சன், ரமேஷ் பாபு ஆகியோர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், ஆலய பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டஸ் ரோக், வின்சென்ட் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன், ஜஸ்டஸ் ரோக் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய குமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் பரிந்துரையின்பேரில், ஆட்சியர் தர் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in