Published : 13 Mar 2024 04:08 AM
Last Updated : 13 Mar 2024 04:08 AM

மார்த்தாண்டத்தில் இளைஞர் கொலை - 15 வயது சிறுவன் கைது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு மாணிக்கவிளையை சேர்ந்தவர் விஜய குமார். இவரது மகன் விஜு ( 24 ). இவர், அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தைஉள்ளது. விஜு மது குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சில நாட்களுக்கு முன்பு குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு அந்த பெண் சென்று விட்டார்.வீட்டில் அவரது 15 வயதான தம்பியும் உள்ளார். அக்காவுடன் விஜு தகராறு செய்வதால் அவர் மீது சிறுவனுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதனை அறிந்த விஜு உடனே மனைவியின் வீட்டுக்கு வந்து, குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல முயன்றுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்று சிகிச்சை அளித்து விட்டு வீட்டுக்கு திரும்பிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்ததும் வீட்டிலிருந்த சிறுவன் வெட்டு கத்தியை எடுத்து வந்து விஜுவை சரமாரியாக வெட்டியுள்ளார். தலையில்பலத்த காயமடைந்த விஜுவை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நேற்று காலை அவர் உயிரிழந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x