Published : 11 Mar 2024 06:10 AM
Last Updated : 11 Mar 2024 06:10 AM

சென்னை | குட்கா விற்பனை தொடர்பாக பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது

சென்னை: கொருக்குப்பேட்டையில் மளிகை கடையில் குட்கா விற்பனை செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அதன்படி, கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் யுவராஜ் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள நைனியப்பன் தெரு மளிகை கடை ஒன்றில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு விரைந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த 23 கிலோ குட்கா, 104 பாக்கெட் மாவா, அது தயாரிக்க பயன்படும் 30 கிலோ ஜர்தா என்னும் மூலப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக கடையை நடத்தி வந்த பச்சையம்மாள் கைது செய்யப்பட்டார். அவரது சகோதரி முனியம்மாள் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க பச்சையம்மாளுக்கு குட்கா விற்பனை செய்ய உடந்தையாக இருந்ததாக கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன், லோகேஷ், நரேந்தர் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கைதான ராஜேந்திரன் ராயபுரம் பாஜக கிழக்கு மண்டல பொருளாளராக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள முனியம்மாளை தொடர்ந்து தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x