

ராமநாதபுரம்: அயோத்தியிலிருந்து ஆன்மிக யாத்திரை வந்த பெண் மீது பரமக்குடி அருகே மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்ட புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சிப்ரா பதக் ( 39 ). நதிகள், மலைகள், மரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆன்மிக தலங்களில் வழிபாடு நடத்தவும் அயோத்தியில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு துணையாக, தாய், தந்தை , குடும்பத்தினர் காரில் வருகின்றனர். வரும் வழியில் சிப்ரா பதக் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு, அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நேற்று முன்தினம் பரமக்குடி வந்தடைந்த அவர் அங்குள்ள சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அன்றிரவு பரமக்குடியில் தங்கிய அவர், நேற்று காலை ராமேசுவரம் செல்வதற்காக யாத்திரையை தொடர்ந்தார். பரமக்குடியிலிருந்து சத்திரக்குடி வழியாக செல்லும் போது காரில் வந்த 8 பேர் கும்பல், சிப்ரா பதக் மீதும், அவருடைய உறவினர்கள் வந்த கார் மீதும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் சிப்ரா பதக்குக்கு கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து பரமக்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் சிப்ரா பதக் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.