ராமேசுவரம் அருகே நடுக்கடலில் ரூ.108 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்: 4 பேர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட படகு.(உள்படம்) கஞ்சா ஆயில் பாக்கெட்.
பறிமுதல் செய்யப்பட்ட படகு.(உள்படம்) கஞ்சா ஆயில் பாக்கெட்.
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, கடலோரக் காவல் படையினர் மற்றும்மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பாம்பன் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நடுக்கடலில் ஒரு நாட்டுப் படகை சோதனையிட்டபோது, அதில் 5 சாக்கு மூட்டைகளில் 111 பாக்கெட்டுகளில், 99 கிலோ எடை கொண்ட ஹாசிஷ் எனும் கஞ்சா ஆயில் இருந்தது.

தொடர்ந்து படகிலிருந்த 3 பேரை போலீஸார் கைது செய்து, மண்டபம் கடலோரக் காவல் படை முகாமுக்கு கொண்டுவந்தனர். அங்கு அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பாம்பனைச் சேர்ந்த ஒருவரிடம் போதைப் பொருளை பெற்று, அதை சர்வதேசகடல் பகுதியில் இலங்கையிலிருந்து வரும் சிலரிடம் ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து, பாம்பனில் மேலும் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

பிடிபட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.108 கோடி என்று மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் தெரிவித்தனர். கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in