

சென்னை: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் (மேட்டுக்குளம் சந்திப்பு) போக்குவரத்து போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சோதனை செய்ததில், அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. அதற்காக போலீஸார் வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த போலீஸார், அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியதோடு காலாலும் எட்டி உதைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கோயம்பேடு போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் சக்திவேல், முதல்நிலைக் காவலர்கள் தினேஷ், அருள் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.