

மதுரை: தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரான மணிகண்டனின் உசிலம்பட்டி வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி எழில் நகரில் வசிப்பவர் மணிகண்டன். திரைப்பட இயக்குநரான இவர், ‘காக்கா முட்டை, கடைசி விவசாயி’ போன்ற திரைப் படங்களை இயக்கி உள்ளார். இவரது ‘கடைசி விவசாயி’ படம் தேசிய விருது பெற்றுள்ளது. மணி கண்டன் குடும்பத்தினருடன் சென்னையில் வசிப்பதால், இங்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.
வீடு பூட்டி இருப்பதை அறிந்த மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 5 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். உசிலம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.