சிறுவனுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை - உதகை கோர்ட் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

உதகை: கூடலூரை அடுத்துள்ள பகுதியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம் ( 65 ). இவர், அப்பகுதியில் ஜீப் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி, அப்பகுதியில் கபடி போட்டிகள் நடைபெற்றன. இதை பார்ப்பதற்காக, அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சென்றனர். அப்போது, 7 வயது சிறுவனுக்கு அப்துல் சலாம் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டல் விடுத்தார். ஆனால், பெற்றோரிடம் சிறுவன் கூறியுள்ளார்.

இது குறித்து கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேஸ்வரி தலைமையிலான போலீஸார் விசாரித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அப்துல் சலாமை கைது செய்தனர். உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்து இந்த வழக்கில், அப்துல் சலாமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜரானார். இதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அப்துல் சலாம் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in