

திருப்பூர்: திருப்பூரில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பனியன் நிறுவன உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருப்பூர் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (39). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது பனியன் நிறுவனத்தில் வேலை செய்த 16 வயது சிறுமியை, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், குற்றம் சுமத்தப்பட்ட சரவணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜரானார். தீர்ப்புக்குப் பின்னர்,சரவணன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.