மகளை பெற்றோரே கொன்ற வழக்கில் மேலும் 3 உறவினர்கள் கைது @ பட்டுக்கோட்டை

மகளை பெற்றோரே கொன்ற வழக்கில் மேலும் 3 உறவினர்கள் கைது @ பட்டுக்கோட்டை
Updated on
1 min read

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்ததால், மகளை பெற்றோரே கொலை செய்த வழக்கில் மேலும் 3 உறவினர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள நெய்வ விடுதியைச் சேர்ந்தவர் பெருமாள் - ரோஜா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா ( 19 ). அருகேயுள்ள பூவாளுரைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் நவீன் ( 19 ). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் அரவம்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், கடந்த டிச.31-ம்தேதி நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு, வீரபாண்டி அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதைத் தொடர்ந்து, மகளை காணவில்லை என பல்லடம் போலீஸில் ஐஸ்வர்யாவின் தந்தை ஜன.2-ம் தேதி அளித்த புகாரின் பேரில், ஐஸ்வர்யாவை போலீஸார் மீட்டு, தந்தையுடன் அனுப்பிவைத்தனர். இதையடுத்து, ஜன.3-ம் தேதி ஐஸ்வர்யா சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் கொலை செய்யப்பட்டு விட்டதாக வாட்டாத்திக்கோட்டை போலீஸில் ஐஸ்வர்யாவின் கணவர் நவீன் புகார் அளித்தார்.

இதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்ததால், ஐஸ்வர்யாவை அவரது பெற்றோரே அடித்து கொலை செய்து, சடலத்தை எரித்தது தெரியவந்தது. இதையடுத்து, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் ( 50 ), தாயார் ரோஜா ( 45 ) ஆகியோரை ஜன.10-ம் தேதியும், தடயங்களை மறைக்க உதவியதாக உறவினர்கள் சின்னராசு ( 30 ), திருச்செல்வம் ( 39 ), முருகேசன் ( 34 ) ஆகியோரை நேற்று முன்தினமும் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தடயங்களை மறைக்க உதவியதாக நெய்வ விடுதியைச் சேர்ந்த உறவினர்களான ஆ.ரங்கசாமி ( 57 ), சூ.பிரபு ( 36 ), பா.சுப்பிரமணியன் ( 56 ) ஆகிய மேலும் 3 பேரை வாட்டாத்திக்கோட்டை போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in