Published : 06 Jan 2024 08:39 AM
Last Updated : 06 Jan 2024 08:39 AM

ஈரோடு பெருந்துறையில் பதுங்கியிருந்த திருநெல்வேலி ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு: இருவர் கைது

ஈரோடு/திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் சிவா என்ற சுப்பிரமணியன் (26). இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. இதில் 6 கொலை வழக்குகள் தொடர்பாக கடந்த ஓராண்டாக போலீஸார் இவரைத் தேடிவருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள மேலக்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி என்பவரை கடந்த நவம்பர் 22-ம் தேதி கொலை செய்த வழக்கில் சுப்பிரமணியன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். நெல்லை மாவட்ட தனிப்படை போலீஸார் இவரைத் தேடிவந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள குள்ளம்பாளையத்தில் சுப்பிரமணியன், அவரது கூட்டாளிகள் முத்து மணிகண்டன், சூர்யா, வசந்தகுமார், இசக்கிபாண்டி ஆகியோர் பதுங்கிஇருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

களக்காடு உதவி ஆய்வாளர் ஆன்டோ பிரதீப் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மதியம் சுப்பிரமணியன் தங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர். அப்போது ரவுடிகள் அரிவாளுடன் போலீஸாரைத் தாக்க முற்பட்டுள்ளனர். இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால், துப்பாக்கி குண்டுகள் அவர்கள் மீது படாமல், சுவரில் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக பெருந்துறை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஆன்டோ பிரதீப் புகார் அளித்தார். இதற்கிடையே, தப்பியோடிய சுப்பிரமணியன், முத்துமணிகண்டன் ஆகியோரை தனிப்படை போலீஸார் பிடித்துள்ளனர்.அப்போது அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலிக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெருந்துறையில் இவர்களுடன் தங்கியிருந்த மற்ற மூன்று பேரும் தப்பிவிட்டனர். அவர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x