

மதுராந்தகம்: படாளம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கொலை சம்பவம் தொடர்பாக, தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்உட்பட 6 பேரை, படாளம் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அடுத்த புக்கத்துறையில் இருந்து உத்திரமேரூர் செல்லும் பிரதான சாலையோரம், கடந்த டிசம்பர் 21-ம் தேதி உடலில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக படாளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே செங்கல்பட்டு டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த நபர் கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் குமார்(40) என்பதும் அவர் ஆட்டோ ஓட்டிவருவதும் தெரிந்தது. இக்கொலை தொடர்பாக, தாம்பரம் மாநகராட்சியின் 45-வது வார்டு கவுன்சிலரும் திமுகவைச் சேர்ந்தவருமான தாமோதரன் உட்பட 6 பேரை படாளம் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கவுன்சிலர் மனைவியுடன் கொலை செய்யப்பட்ட குமார் பழகி வந்ததாகவும். கணவருக்கு தெரியாமல் சொத்துகளை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த பணத்தை குமாரிடம்வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், கடந்த 21-ம் தேதி குமாரை நட்பாகப் பேசி அழைத்துக் கொண்டு படாளம் வந்த கவுன்சிலர் தாமோதரன், மதுவைக்குடிக்க வைத்து சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தை வழங்குமாறு குமாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தன்னிடம் பணம் இல்லை எனக் குமார் கூறியதால், கவுன்சிலர் மற்றும் அவருடன் இருந்த நபர்கள், குமாரைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் கூறினர்.
இதன்பேரில், கவுன்சிலர் மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேரைக் கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.