

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே சாலையோர உள்ள ஏரி தடுப்புச் சுவர் மீது மோதி ஏரி நீரில் கார் பாய்ந்தது. இதில், தம்பதி காயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி ராசு வீதியைச் சேர்ந்தவர் சங்கர் ( 61 ). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பயணச் சீட்டு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி உமா ( 55 ). இவர்கள் இருவரும் காவேரிப்பட்டணம் அருகே குண்டலப் பட்டி சிவனாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நேற்று காரில் சென்றனர்.
பின்னர் இருவரும் மதியம் 2.30 மணியளவில் காரில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். எள்ளுக்குட்டை ஏரி அருகே கார் வந்த போது, சாலையோரம் உள்ள ஏரியின் தடுப்புச் சுவரில் மோதி ஏரி நீரில் கார் பாய்ந்தது. இதில் காயம் அடைந்து நீரில் தத்தளித்த தம்பதியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவேரிப் பட்டணம் போலீஸார், கிரேன் மூலம் ஏரியிலிருந்து காரை மீட்டனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.