சென்னை | ரூ.25 கோடி தொழிற்கடன் பெற்றுத் தருவதாக தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

முத்துவேல்
முத்துவேல்
Updated on
1 min read

சென்னை: தொழிலை விரிவுபடுத்த ரூ.25 கோடி கடன் பெற்றுத் தருவதாக, தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.86 லட்சம் பெற்று மோசடி செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கொடுங்கையூர், காமராஜர் சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் (43). தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர், தனது தொழிலை விரிவுபடுத்த வில்லிவாக்கம், வடக்கு ஜெகநாத நகரைச் சேர்ந்த முத்துவேல் என்ற லயன் முத்துவேலை (45) அணுகி ரூ.25 கோடி கடன் ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுள்ளார்.

3 தவணைகளாக... கடன் பெற்றுத் தர முன்பணம் தர வேண்டும் எனக் கூறியதன்பேரில், கிருஷ்ணகுமார் 3 தவணைகளாக ரூ.86 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட முத்துவேல், உறுதி அளித்தபடி கடன் பெற்றுக் கொடுக்காமல் காலம் தாழ்த்திஉள்ளார். மேலும், பெற்றுக்கொண்ட பணத்தையும் திரும்ப வழங்காமல் ஏமாற்றினாராம். இதனால், அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணகுமார் இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து நந்தம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, அக்காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், கிருஷ்ணகுமார் அளித்தபுகார் உண்மை என தெரியவந்ததையடுத்து முத்துவேல், அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த நங்கநல்லூரைச் சேர்ந்த ஏஞ்சலினா கிறிஸ்டி நிஷா (43) ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட முத்துவேல் மீது ஏற்கெனவே 3 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in