Published : 15 Dec 2023 06:22 AM
Last Updated : 15 Dec 2023 06:22 AM

புழல் மத்திய சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்: பெண் காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

செங்குன்றம்: கர்நாடக மாநிலம் - பெங்களூருவை சேர்ந்தவர் ஜெயந்தி (32). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை - செம்மஞ்சேரி பகுதியில் குடிப்பெயர்ந்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயந்தி, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில், ஒரு வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கு தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், புழல் சிறை வளாகத்தில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயந்திக்கு நேற்று முன்தினம் தூய்மைப் பணி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பணியை, ஜெயந்தி, கைதிகளை பொதுமக்கள் பார்க்கும் அறையில் மேற்கொண்டுள்ளார். அப்போது, அந்த அறை வழியாக மதியம் 3 மணியளவில் ஜெயந்தி, தப்பியோடி உள்ளார். அவர் தப்பியோடியது உடனடியாக தெரியவில்லை.

இச்சூழலில், வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை கைதிகளை சிறை காவலர்கள் எண்ணியபோது, ஜெயந்தி காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து, சிறை அலுவலர்கள், சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது, பொதுமக்கள் மனு கொடுத்து கைதிகளை பார்க்கும் அறை வழியாக தப்பி சென்றது தெரியவந்தது. புழல் போலீஸார், தப்பியோடிய ஜெயந்தியை தேடி வருகின்றனர். சிறை காவலர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகியோரை சிறைத் துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x