

ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.66 லட்சம்மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடற்கரைப் பகுதியில், இலங்கைக்கு கடத்துவதற்காக வலி நிவாரணி மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் சென்ற நாட்டுப் படகை துரத்திச் சென்றபோது, அதிலிருந்தவர்கள் படகை கடற்கரையோரம் நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பினர்.
படகை சோதனையிட்டதில், 13 அட்டைப் பெட்டிகளில் ரூ.66லட்சம் மதிப்பிலான, 6 லட்சம்வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததும், அவற்றை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, மாத்திரைகளையும், படகையும் பறிமுதல்செய்த கடலோரக் காவல் படையினர், அவற்றை சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.