

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சுஜாதா தலைமையிலான போலீஸார், பொள்ளாச்சி-உடுமலை சாலை மரப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேப்படும்படி நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சர்வேஸ்வர சாகு (39) என்பதும், கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் பானிபூரி கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் கடந்த சில தினங்களாக ஒடிசாவில் இருந்து போதை சாக்லெட் கடத்தி வந்து, பொள்ளாச்சியில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்து 5.25 கிலோ போதை சாக்லெட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் சர்வேஸ்வர சாகுவைக் கைது செய்து, பொள்ளாச்சி ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.1-ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.