Published : 01 Dec 2023 04:04 AM
Last Updated : 01 Dec 2023 04:04 AM

ஆயுர்வேத மசாஜ் செய்வதாக பல லட்ச ரூபாய் மோசடி: 9 பேர் கைது @ கோவை

கோவை: ஆயுர்வேத மசாஜ் செய்வதாக கூறி, பல லட்ச ரூபாய் மோசடி செய்த 9 பேர் கும்பலை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவையைச் சேர்ந்த 45 வயதான நபர், மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், “இணைய தளம் மூலம் ஆயுர்வேத மசாஜ் தொடர்பான தகவலை அறிந்து, அதில் குறிப்பிட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டேன். அவர்கள் கூறியபடி ரூ.8.25 லட்சம் தொகையை செலுத்தினேன். அதன் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

அதன் பேரில், ஆய்வாளர் அருண் தலைமையிலான சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்தனர். அதில் மோசடியில் ஈடுபட்டவர்கள் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சேரன் நகரை சேர்ந்த ஹரிபிரசாத்(31), பணிக்கம்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (26), தேவம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (25), ஈரோட்டை சேர்ந்த சரவண மூர்த்தி (23), திருப்பூரை சேர்ந்த அருண்குமார்(24), மற்றொரு சக்திவேல் (29), ஜெய பாரதி (22), மகேந்திரன் (30), கோகுல் (31) ஆகிய 9 பேர் என தெரியவந்தது.

இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் கூறும்போது,‘‘பிரத்யேக செயலியில் வரும் தகவல், விவரங்களை கேட்பவர்களை குறி வைத்து இந்த கும்பல் மோசடி செய்து வந்துள்ளது. இதற்காக இவர்கள் புதிதாக சிம்கார்டுகள் வாங்கி, புதிய வங்கி கணக்கு தொடங்கி அதில் பணம் பெற்றுள்ளனர். மும்பை, பெங்களூரூ, கோவா உட்பட பகுதியில் தங்கி இருந்து இந்த கும்பல் மோசடி செய்துள்ளது. இவர்கள் மசாஜ் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பெண்களை அனுப்புவதாகவும், குறிப்பிட்ட ஹோட்டல், ரிசார்ட்டில் சர்வீஸ் செய்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஹோட்டல், ரிசார்ட்டை நீங்களே தேர்வு செய்யலாம், அங்கே பெண்கள் வருவார்கள் என கூறுவர். அதன் பின் பெண்களின் புகைப்படங்கள், விவரங்களை அனுப்புவார்கள். ஆனால், அங்கு சென்றால் எந்த பெண்ணும் வரமாட்டார்கள். ஏராளமானோரிடம் இருந்து பல லட்சம் பணத்தை பறித்துள்ளனர். ஏமாந்த நபர்கள் பலர் புகார் தர முன் வரவில்லை. இதனை பயன்படுத்தி இந்த மோசடி கும்பல் தொடர்ந்து பணம் பறித்துள்ளனர்.

இதையடுத்து மோசடி, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து பெங்களூரூவில் பதுங்கியிருந்த 9 பேரும் கைது செய்யப்பட்டனர்,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x