ராணுவ வீரர்களிடம் ரூ.1,200 கோடி மோசடி: ஈரோடு தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் கைது

ராணுவ வீரர்களிடம் ரூ.1,200 கோடி மோசடி: ஈரோடு தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் கைது

Published on

ஈரோடு: ராணுவ வீரர்களிடம் ரூ.1,200 கோடிமோசடியில் ஈடுபட்டதாக தனியார் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு-மேட்டூர் சாலையில் செயல்பட்டு வந்த `யுனிக் எக்ஸ்போர்ட்' நிறுவனத்துக்கு, தமிழகம் முழுவதும் கிளைகள் இருந்தன. இதன் நிர்வாகஇயக்குநர் நவீன்குமார். இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.80 லட்சமும், ரூ.5 லட்சம்முதலீடு செய்தால் மாதம் ரூ.75 ஆயிரம்வீதம் ரூ.7.50 லட்சமும், ரூ.25 லட்சம்முதலீடு செய்தால் 5 வருடங்களில் 4 தவணையாக ரூ.83 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும்அவர்களது உறவினர்களுக்காக மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை நம்பி, ஈரோடு, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பணியில் உள்ள ராணுவ வீரர்கள் ரூ.1,200 கோடி முதலீடு செய்தனர்.

முதலீடு செய்த முதல் 2 மாதங்களுக்கு மட்டும் பணத்தை திருப்பிக் கொடுத்த அந்த நிறுவனம், அதன் பிறகு பணத்தை வழங்கவில்லை. பின்னர் திடீரென அந்த நிறுவனம் மூடப்பட்டது. நிர்வாக இயக்குநரின் செல்போன் சுவிட்ச் ஆஃப்ஆனது. தொடர்ந்து, அவர் தலைமறைவானார். அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முன்னாள் ராணுவத்தினர், ராணுவத்தினர் மற்றும்அவர்களது உறவினர்கள், இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர்,எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனுக்களை அளித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட குற்றப் பிரிவு போலீ்ஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான நிர்வாக இயக்குநர் நவீன்குமாரைத் தேடி வந்தனர். இந்நிலையில், நவீன்குமார் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்காக, சென்னை விமான நிலையத்துக்கு வந்திருப்பதாக ஈரோடு குற்றப் பிரிவு போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விரைந்த போலீஸார் நவீன்குமாரைக் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in