

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி ஹவாலாபணத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு காரணமாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர். சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்ராஜ் (39). இவர் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் மாதவரம் பேருந்து நிலையத்தில் சவாரிக்காக காத்திருந்தார். அப்போது 3 இளைஞர்கள் வால்டாக்ஸ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்ல வேண்டும் என கூறி சுந்தர்ராஜ் ஆட்டோவில் ஏறியுள்ளனர். ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, 3 பேரும் சந்தேகப்படும் வகையில் பேசியுள்ளனர்.
அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுந்தர்ராஜ், வால்டாக்ஸ் சாலை வந்தபோது ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு அருகில் உள்ள யானைகவுனி காவல் நிலையத்துக்கு சென்றார். சந்தேக நபர்கள் 3 பேர் தனது ஆட்டோவில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு விரைந்த போலீஸார் 3 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பிடிபட்ட 3 பேரும் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரிந்தது.
நகை வாங்க கொடுத்ததா? - அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனையிட்டபோது, அதில் கட்டுக்கட்டாக ரூ.2 கோடியே ஒரு லட்சம் ஹவாலா பணம் (உரிய ஆவணம் இல்லாத பணம்) இருந்தது தெரிந்தது.அதை பறிமுதல் செய்த போலீஸார், பணத்தை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சென்னையில் வசிக்கும் தொழிலதிபரிடம் தங்க நகை வாங்க அந்தப் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். சமயோகிதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீஸ் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.