Published : 22 Nov 2023 04:43 PM
Last Updated : 22 Nov 2023 04:43 PM

புதுச்சேரியில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி

புதுச்சேரி: தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு இணையாக மோசடிகளும் நடந்து வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொடரும் மோசடிகளால் மக்கள் கடும் பாதிப்பில் உள்ளனர். புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகரன் என்பவர் ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ.9 ஆயிரம் கடன் பெற்றார். அந்த தொகையை வட்டியுடன் ரூ.14 ஆயிரமாக திருப்பி செலுத்தினார்.

அவரை இணையதளம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஹரிகரனின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து, மேலும் பணத்தை செலுத்தும்படி மிரட்டியுள்ளார். இதேபோல் பண்டசோழநல்லூரைச் சேர்ந்த மங்கையர்கரசி என்பவரிடம் மர்மநபர் ஒருவர் வங்கி அதிகாரியைப்போல் பேசி ரகசிய எண்ணை (ஓடிபி) பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 மோசடி செய்துள்ளார். லாஸ்பேட்டை பெத்து செட்டிபேட்டை சதீஷ் என்பவரிடம் அவரது உறவினர் பேசுவதைப்போல் மர்மநபர் ஆள்மாறாட்டம் செய்து ரூ.60 ஆயிரத்தை ஆன்லைன் மூலமாக பெற்று மோசடி செய்துள்ளார். புதுப்பேட்டை ராஜராஜன் என்பவரிடம் பாஸ்டாக் அதிகாரியைப்போல் பேசி ரூ.8 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.

ஆரோவில் ஜோதிர்மயி பொம்மோனா தனது தந்தைக்கு கூரியர் மூலம் லேப்டாப் அனுப்பியுள்ளார். கூரியர் அதிகாரியைப்போல் பேசிய நபர் அவரிடம் அப்பொருளை பெற ரூ.10-ஐ வங்கிக் கணக்கில் இருந்து செலுத்துமாறு கூறி ஒரு லிங்க் அனுப்பினார். அதை நம்பிய ஜோதிர்மயி அப்பணத்தை அனுப்பிய நிலையில், அடுத்த சில நொடிகளில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. தவளக்குப்பத்தில் வசிக்கும் அரிகரன் என்பவரிடம், பகுதிநேர வேலை இருப்பதாகவும், இதன்மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி டெலிகிராமில் ஒரு லிங்க் வந்துள்ளது.

அதன்படி ஆன்லைனில் சிறிய தொகையை முதலீடு செய்து பணியை தொடங்கினார். பின்னர் மர்ம நபர்கள் கூறியதை நம்பி ரூ.3.75 லட்சத்தை முதலீடு செய்த பிறகு எந்த வருமானமும் வரவில்லை. மேலும் முதலீடு செய்த பணத்தையும் திரும்ப எடுக்க முடியவில்லை. கோவிந்தசாலையை சேர்ந்த கவி என்பவரிடம் பிட்காயின் முதலீடு ஆசைகாட்டியும், பிரசாத் என்பவரிடம் ஓடிபி பெற்றும் பணம் மோசடி நடந்துள்ளது. இதுதவிர அரும்பார்த்தபுரம் செந்தில்குமார் ரூ.2 ஆயிரத்துக்கு உலர்பழங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து பணத்தை இழந்துள்ளார்.

திவ்யா என்ற இளம்பெண்ணிடம் பாஸ்டாக் அதிகாரியைப்போல் பேசி ரூ.8 ஆயிரத்தை மர்ம ஆசாமி நூதனமாக ஏமாற்றி பறித்துள்ளார். மொத்தம் 4 பெண்கள் உட்பட 10 பேரிடம் நூதனமாக நடந்த ரூ.5.06 லட்சம் மோசடிகள் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி, கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மைக் காலத்தில் ஆன்லைனில் மோசடி அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையான பாதிப்பில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x