சென்னை | போலி ஆவணம் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் மூதாட்டியின் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: 5 பேர் கும்பல் கைது

ஆள் மாறாட்டம் மூலம் மூதாட்டியின் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்ட 5 பேர் கும்பல்.
ஆள் மாறாட்டம் மூலம் மூதாட்டியின் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்ட 5 பேர் கும்பல்.
Updated on
1 min read

சென்னை: ஆள் மாறாட்டம் மூலம் மூதாட்டியின் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் லைசா ஜோஸ்பின் (88). மூதாட்டியான இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், ``திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டம், கொன்னூர் கிராமத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான காலி வீட்டுமனை எனது தந்தை பெயரில் இருந்தது. தந்தை 1979-ல் இறந்து விட்டார். அதன் பிறகு அந்த இடம் எனது பராமரிப்பில் உள்ளது.

ஆணையர் உத்தரவு: இந்நிலையில், அந்த நிலத்தைச் சிலர் போலி ஆவணங்களை உருவாக்கி, ஆள் மாறாட்டம் செய்து, நிலத்தை அபகரித்துவிட்டனர். எனவே, மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும்'' எனப் புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.அதன்படி, அப்பிரிவு துணை ஆணையர் ஆரோக்கியம் மேற்பார்வையில் ஆய்வாளர் முருகேஷ்வரி விசாரணை நடத்தினார்.

நீதிமன்ற காவலில் சிறை: இதில், போலி ஆவணங்களை உருவாக்கி ஆள் மாறாட்டம் மூலம் லைசா ஜோஸ்பின் காலி வீட்டுமனை அபகரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக வழக்குப் பதிந்த மத்திய குற்றப் பிரிவு போலீஸார் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பாபு (57), தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை குருசாமி (63), திருவேற்காடு முருகப்பன் (61),அதே பகுதி முத்து (55), வில்லிவாக்கம் நாகராஜ் (52) ஆகிய 5பேரைக் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில்சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in