Published : 16 Nov 2023 06:29 AM
Last Updated : 16 Nov 2023 06:29 AM

ஆவடி | குடும்ப பிரச்சினை காரணமாக திருமுல்லைவாயிலில் தாய், மகன் தற்கொலை

லோகேஸ்வரன், பரமேஸ்வரி

ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் குடும்பப் பிரச்சினையால் தாய், மகன் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில், சாந்திபுரம், 4-வது தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி (47). இவர், சென்னை, அம்பத்தூரிலுள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவரது மகன் லோகேஸ்வரன் (27), ஆவடி கன ரக வாகன தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

இதற்கிடையே, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பரமேஸ்வரியின் கணவர் ரமேஷ் கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தனியாக வசித்து வருகிறார். மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பரமேஸ்வரியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தந்தையின் பிரிவு, தங்கையின் இறப்பு ஆகியவற்றால் லோகேஸ்வரன் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பணிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த லோகேஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பணிமுடிந்து இரவு வீடு திரும்பிய பரமேஸ்வரி, மகன் லோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பிறகு, அவரும் வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த திருமுல்லைவாயில் போலீஸார், பரமேஸ்வரி, லோகேஸ்வரன் ஆகியோரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, திருமுல்லைவாயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x