Published : 14 Nov 2023 06:17 AM
Last Updated : 14 Nov 2023 06:17 AM

இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்ததாக 5 பேர் கைது @ திருச்சி

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், பள்ளிவிடை- சிறுமருதூர் இடையே இளைஞர்கள் சிலர்நவ.9-ம் தேதி இரு சக்கர வாகனத்தின் முன்புறம் பட்டாசு கட்டிக் கொண்டு வீலிங் செய்தவாறு வெடித்து சாகசம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக திருச்சி மாநகர் மற்றும் புறநகர் போலீஸார் விசாரணை நடத்தியதில், தஞ்சாவூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், இதற்கு திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த அஜய்(24) உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதனிடையே, கல்லாங்காடு பகுதியில் வீலிங் செய்ததாக அஜய்யை நேற்று முன்தினம் அரசு மருத்துவமனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமயபுரம் அருகே வீலிங் செய்ததாக மணிகண்டன் உள்ளிட்டோர் மீது சமயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவர்களைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாநகரில் தீபாவளி நாளில் சிந்தாமணி பஜார் மற்றும் செந்தண்ணீர்புரம் அணுகுசாலை பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக சிந்தாமணி பஜார் உசேன் பாஷா(24), தாராநல்லூர் ராஜேஷ்(21) ஆகியோரை முறையே கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் போலீஸாரும், புறநகரில் கம்பரசம்பேட்டையைச் சேர்ந்த பர்ஷத் அலி(21), ஊட்டத்தூரைச் சேர்ந்த அஜித்(22) ஆகியோரை முறையே ஜீயபுரம் மற்றும் காணக்கிளியநல்லூர் போலீஸாரும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x