சமூக வலைதளங்களில் தீபாவளி ஆஃபர் பெயரில் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்: காவல் துறை

சமூக வலைதளங்களில் தீபாவளி ஆஃபர் பெயரில் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்: காவல் துறை

Published on

வேலூர் / திருவண்ணாமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகும் போலியான விளம்பரங்ளை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்ஸ் டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்), முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பட்டாசுக்கள், இனிப்பு பலகாரங்கள், மின்னணு சாதனங்கள், துணிகள், அழகு சாதன பொருட்கள்,

வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக போலியான விளம்பரங்கள் வெளியாகின்றன. இதனை நம்பி பணத்தை செலுத் துபவர்கள் பொருட்கள் பெறாமல் இழந்த பணத்தை மீட்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

அதேபோல், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற 'ஆன்லைன்' தளங்களை போல் போலியான ஷாப்பிங் விளம்பரங்களை உருவாக்கி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது போன்ற போலியான விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என சைபர் குற்றப் பிரிவு காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படு்த்தி வரு கின்றனர்.

எனவே, சமூக வலைதளங்களில் குறைந்த விலையில் ஆடை, பட்டாசு, இனிப்பு பலகாரங்களை விற்பனை செய்வதை நம்ப வேண்டாம். வாட்ஸ் - அப், டெலிகிராம் செயலிகளில் நிறுவனங்களின் பெயரில் வரும் குறுஞ் செய்திகள், இணைப்புகளில் வங்கி தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டாம்.

‘ஆன்லைனில்' வாங்கிய பொருட்களுக்கு பரிசு விழுந்துள்ளதாக வரும் குறுஞ் செய்திகளையும் தபால்களையும் நம்பி பணத்தை இழக்க வேண்டாம். இது போன்ற சைபர் மோசடி குற்றங்களில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in