தூத்துக்குடி காதல் தம்பதி கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் நீதிமன்றத்தில் சரண்

தூத்துக்குடி காதல் தம்பதி கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் நீதிமன்றத்தில் சரண்
Updated on
1 min read

திருநெல்வேலி: தூத்துக்குடியில் காதல் தம்பதி கொலை வழக்கில் தேடப்பட்ட 2 பேர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

தூத்துக்குடி மடத்தூர் பிரதான சாலையிலுள்ள முருகேசன் நகரை சேர்ந்த வசந்த குமார் மகன் மாரிச் செல்வம் (24). இவரும் திருவிக நகர் முத்துராமலிங்கம் மகள் கார்த்திகாவும் (20 ) காதலித்து வந்த நிலையில் கடந்த 30-ம் தேதி கோவில்பட்டிக்கு சென்று பதிவு திருமணம் செய்தனர்.

திருமணம் முடிந்த 3-வது நாள் இருவரும் தூத்துக்குடி வந்து முருகேசன் நகரிலுள்ள வீட்டில் இருந்த போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் மாரிச்செல்வம், கார்த்திகா ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர். இது தொடர்பாக சிப்காட் போலீஸார் வழக்கு பதிந்து முத்துராமலிங்கம் (47), கேவிகே நகரை சேர்ந்த இசக்கி ராஜா (23), சங்கர்காலனி ராஜ பாண்டி (27) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த தூத்துக்குடியை சேர்ந்த பரத் விக்னேஷ், கருப்பசாமி ஆகியோர் வள்ளியூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in