

சென்னை: சமூக வலைதளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி குறித்து அவதூறு பரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், திமுக எம்.பி கனிமொழி குறித்தும் சமூக வலைதளமான எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அண்மையில் அவதூறு மற்றும் வதந்தி பரப்பப்பட்டது.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் தெரிவித்தார். இந்த புகார் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
கோவையை சேர்ந்தவர்... விசாரணைக்குப் பிறகு அவதூறு பரப்பியவர் கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வேலு முருகானந்தம் (54) என்பது தெரியவந்தது.
கத்தார், துபாயில் வேலை செய்து வந்த அவர், அங்கிருந்தவாறும் அவதூறு பரப்பி உள்ளார். அவர் கோவை வந்திருப்பதை அறிந்த சென்னை சைபர் க்ரைம் போலீஸார் அங்கு சென்று வேலு முருகானந்தத்தை கைது செய்தனர்.