சென்னைக்கு கடந்த இருந்த ரூ.4.48 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்; 2 பேர் கைது

சென்னைக்கு கடந்த இருந்த ரூ.4.48 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்; 2 பேர் கைது
Updated on
1 min read

திருச்சி: ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு ரூ.4.48 கோடி மதிப்பிலான தங்கத்தை காரில் கடத்திச் சென்ற 2 பேரை திருச்சியில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு தங்கம் கடத்திச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகேயுள்ள சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக ராமேசுவரத்தில் இருந்து வந்தஒரு காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் 3 சூட்கேஸ்களில் தங்கக் கட்டிகள்இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் வந்த இருவரை சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் லயனவாடி தெரு முகமது இர்பான்(28), மணவை தெரு அஜ்மல்கான்(24) என்பதும், சென்னையில் உள்ள நகைக்கடை வியாபாரியிடம் வழங்குவதற்காக 45 தங்கக் கட்டிகளாக ரூ.4.48 கோடி மதிப்பிலான 7.556 கிலோ கிராம் தங்கத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் அதிகாரிகள் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், கடத்திவரப்பட்ட தங்கம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in