திருப்பத்தூரில் இரவில் வீடுகளில் கல் வீசும் மர்ம நபர்கள்: 3 வாரங்களாக போலீஸாரோடு இணைந்து காவல் காக்கும் இளைஞர்கள்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இரவில் வீடுகளில் மர்ம நபர்கள் கல் வீசி வருகின்றனர். இதையடுத்து 3 வாரங்களாக போலீஸாரோடு இணைந்து இளைஞர்கள் காவல் காத்து வருகின்றனர்.

திருப்பத்தூரில் அய்யாதுரை சந்து, அச்சுக்கட்டு பகுதி, முகமதியார்புரம், கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 3,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக, இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மர்ம நபர்கள் கற்களை எறிந்து வருகின்றனர்.

இதில் முகமதியார்புரத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். மேலும் வீட்டின் ஓடுகள், ஜன்னல், கதவுகள், வாகனங்கள் சேதமடைந்தன. இதையடுத்து போலீஸாரோடு இணைந்து அப்பகுதி இளைஞர்கள் காவல் காத்து வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் இரவில் வெளியேற முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர்.

இது குறித்து முகமதியார்புரம் மக்கள் கூறுகையில் ‘‘ போலீஸார், இளைஞர்கள் தினமும் இரவு காவல் காத்து வருகின்றனர். எனினும் ஆட்கள் இல்லாத இடங்களில் கற்களை வீசுகின்றனர். அங்கு போலீஸார் செல்வதற்குள் அந்நபர்கள் தப்பி விடுகின்றனர். இந்த சம்பவத்தால் கடந்த செப்.23-ம் தேதியில் இருந்து இரவில் தூக்கத்தை தொலைத்து அச்சத்துடன் இருந்து வருகிறோம். கூடுதல் போலீஸாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தி மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in