Last Updated : 09 Oct, 2023 09:55 PM

 

Published : 09 Oct 2023 09:55 PM
Last Updated : 09 Oct 2023 09:55 PM

சேலம் தூய்மைப் பணியாளர் கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை

சேலம்: கிச்சிப்பானையம் பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளரை கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது.

சேலம், கிச்சிப்பாளையம் தேசிய புனரமைப்பு காலனியைச் சேர்ந்த விஜயகுமார். இவர் சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மகன் சூர்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த குட்டியப்பன் என்பவருடன் வாய் தகராறு சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் குட்டியப்பனை சூர்யா கத்தியால் குத்தியுள்ளார். பலத்த காயத்துடன் குட்டியப்பன் சேலம் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனை அறிந்த குட்டியப்பனின் சகோதரர்கள் டெனிபா,சிலம்பரசன், விக்கி, திருநாவுக்கரசு, இவர்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து சூர்யாவை கொலை செய்யும் நோக்கத்திற்காக சூர்யாவின் வீட்டுக்கு எட்டு பேர் சென்றனர். அப்போது சூர்யா வீட்டில் இல்லாததால், சூர்யாவின் தந்தை துப்புரவு பணியாளர் விஜயகுமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். இந்த தகராறு முற்றவே, குட்டியப்பன் சகோதரர்கள் மற்றும் அவரது நண்பர்கள் எட்டு பேரும், துப்புரவு பணியாளர் விஜயகுமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்து, தப்பி சென்றனர்.

இது குறித்து கிச்சிப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாநகராட்சி துப்புரவு பணியாளரை கொலை செய்த வழக்கில் கிச்சிப்பாளையம் பாளையம் பகுதியைச் சேர்ந்த டெனிபா (35), சிலம்பரசன் (31), விக்னேஷ் (24), திருநாவுக்கரசு (30), ஜீசஸ் (27), மார்ட்டின் (35 ) ஜெயக்குமார் (25), சிவா (24) ஆகிய எட்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். ஆயுள் தண்டனை பெற்ற எட்டு பேரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x