Published : 08 Oct 2023 07:26 AM
Last Updated : 08 Oct 2023 07:26 AM

போதைப் பொருள் வழக்கில் சிக்கி இலங்கையில் இருந்து தப்பித்து ராமநாதபுரம் பாம்பன் பகுதிக்கு வந்தவர் கைது

ராமநாதபுரம்: இலங்கையில் போதைப் பொருள் வழக்கில் சிக்கி, அங்கிருந்து தப்பித்து ராமேசுவரம் வந்த இலங்கைவாசியும், அவருக்கு உதவிய தங்கச்சிமடம் இளைஞரும் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகேயுள்ள குந்துகால் கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த இருவரை, அப்பகுதி மீனவ மக்கள் பிடித்து, மண்டபம் மெரைன் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் இலங்கை மன்னார் மாவட்டம் பேச்சாலை பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்ற வாசு (43) என்பது தெரியவந்தது. இவர் நேற்று முன்தினம் மாலை பேச்சாலை பகுதியில் இருந்து ரூ.1.50 லட்சம் கொடுத்து படகில்புறப்பட்டுள்ளார். அவரை பாம்பன்குந்துகால் கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை இறக்கி விட்டுள்ளனர்.

இவர் பேச்சாலை பகுதியில்மெத்தாபெட்டமைன் என்றபோதைப்பொருள் வைத்திருந்தபோது, இலங்கை முருங்கன் போலீஸாரால் பிடிபட்டு, பின்னர் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பித்து ராமேசுவரம் வந்துள்ளார்.

கடத்தல் வழக்குகள்...: இலங்கையில் இவர் மீது ஏற்கெனவே பல போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், கோயம்புத்தூருக்கு இலங்கை தேவராஜன் தப்பிச் செல்ல தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சந்தியா சுரேஷ்(26) என்பவர் ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. சந்தியா சுரேஷ் மீது 6 வழக்குகள் உள்ளன.

இதையடுத்து, மெரைன் போலீஸார் இலங்கை தேவராஜன்(43), தங்கச்சிமடம் சந்தியா சுரேஷ் ஆகியோரைக் கைது செய்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x