2 குழந்தைகளுடன் பெண் காவலர் தற்கொலை; ரயில்வே பாதுகாப்பு படை வீரரும் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு: கூடாநட்பு விவகாரம் காரணம் என போலீஸார் தகவல்

2 குழந்தைகளுடன் பெண் காவலர் தற்கொலை; ரயில்வே பாதுகாப்பு படை வீரரும் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு: கூடாநட்பு விவகாரம் காரணம் என போலீஸார் தகவல்

Published on

மதுரை/கோவில்பட்டி: மதுரை அருகே பெண் காவலர் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதேபோல, ரயில்வே பாதுகாப்புப் படை வீரரும் தற்கொலை செய்துகொண்டார். அவர்களிடையேயான கூடாநட்பு காரணமாக இந்த சம்பவங்கள் நேரிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மதுரை சமயநல்லூர் அருகேநேற்று முன்தினம் மாலைரயில்வே பெண் காவலர் ஜெயலட்சுமி, தனது இருகுழந்தைகளுடன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவர் திருச்சிக்குஇடமாறுதல் செய்யப்பட்ட நிலையில், மருத்துவ விடுப்பு எடுத்திருந்தார். இந்நிலையில், ரயில் முன் பாய்ந்து, குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு சாத்தூர்-நள்ளி ரயில்நிலையம் இடையே, திருச்செந்தூர்-சென்னை விரைவு ரயில் முன் பாய்ந்து ஆண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கலிங்கபாண்டியன்(48) என்பதும், செங்கோட்டையில் ரயில்வே பாதுகாப்புப் படையில் ஹவில்தாராகப் பணிபுரிந்ததும் தெரியவந்தது.

அவர் ஏற்கெனவே மதுரைரயில் நிலையத்தில் பணிபுரிந்தபோது, பெண் காவலர் ஜெயலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெயலட்சுமி தனது இரு குழந்தைகளுடன் உயிரிழந்த தகவலை அறிந்த சொக்கலிங்க பாண்டியனும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி இருப்புப் பாதை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஜெயலட்சுமியின் உடலுக்கு மதுரை கோட்டரயில்வே எஸ்.பி. செந்தில்குமார், மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார். ஜெயலட்சுமி தற்கொலை குறித்து ரயில்வே போலீஸ் தரப்பில் கூறியதாவது: மதுரையில் கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்த காவலர் ஜெயலட்சுமிக்குத் திருமணமாகி, இரு குழந்தைகள் இருந்தனர். அப்போது செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சொக்கலிங்க பாண்டியனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சொங்கலிங்க பாண்டியனுக்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதை அறிந்த ஜெயலட்சுமி, இதைக் கண்டித்துள்ளார். மேலும், சொக்கலிங்க பாண்டியனுக்குத் தொடர்புஉள்ளதாகக் கூறப்பட்ட ஒரு பெண்ணிடமும் ஜெயலட்சுமி செல்போனில் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை அந்தப் பெண் பதிவுசெய்து வைத்துக்கொண்டு, சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக ஜெயலட்சுமியை மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து, தனதுஇரு குழந்தைகளுடன் ஜெயலட்சுமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இது தொடர்பாக சில ஆடியோக்களை கைப்பற்றி, விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.

உயிரிழந்த சொக்கலிங்க பாண்டியன் (48), ராமநாதபுரம் மாவட்டம்கடலாடி அருகேயுள்ள கொக்கரங்கோட்டையைச் சேர்ந்தவர். இவர்ஏற்கெனவே மதுரை ரயில் நிலையத்தில் பணிபுரிந்தபோது, பெண் காவலர் ஜெயலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் குடும்பம் நடத்திஉள்ளார்.

ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் விரக்தியடைந்த சொக்கலிங்க பாண்டியன், தனது அண்ணனுக்கு செல்போனில் ‘நான் சாகப் போகிறேன் ’ என்று தகவல் தெரிவித்துவிட்டு, பின்னர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

சொக்கலிங்க பாண்டியனின் அண்ணன் சச்சிதானந்த பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில்,தூத்துக்குடி ரயில்வே போலீஸார்வழக்கு பதிவு செய்து, விசாரிகின்றனர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in