கோப்புப்படம்
கோப்புப்படம்

ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கும்போது ரயில்வே அதிகாரி கைது: ரூ.2.61 கோடி பறிமுதல்

Published on

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் தென்கிழக்கு ரயில்வே, முதன்மை தலைமை மெட்டீரியல் மேலாளராக பணியாற்றி வருபவர் கே.சி.ஜோஷி. இவர் ரயில்வே துறைக்கு வருடாந்திர ஒப்பந்தத்தில் லாரிகள் சப்ளை செய்யும் ஒரு நிறுவனத்திடம் ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக அந்நிறுவனத்தின் சார்பில் சிபிஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஜோஷியை கையும் களவுமாக பிடிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். சிபிஐ அதிகாரிகள் கூறியபடி, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தினர் ரயில்வே அதிகாரி ஜோஷியிடம் சென்று ரூ.3 லட்சம் அளித்தனர். அந்த பணத்தை லஞ்சமாக பெற்றபோது, அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் ஜோஷியை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இதையடுத்து கோரக்பூரில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் நொய்டாவில் உள்ள சொந்த வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்றுசோதனை நடத்தினர். அங்கிருந்த ரூ.2.61 கோடி ரொக்கம் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

ஒப்பந்த நிறுவனம் ஒரு லாரிக்கு மாதத்துக்கு ரூ.80 ஆயிரம் வீதம் ரயில்வே துறைக்கு லாரிகளை சப்ளை செய்கிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் மின்னணு சந்தை (GeM) இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த இணையதளத்தில் இருந்து அந்த நிறுவனத்தை நீக்காமல் இருக்க ஜோஷி ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in