

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் ஜெகன்(34). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், பாஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்தார். கேடிசி நகரில் வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு மூளிக்குளம் சுடலைமாட சுவாமி கோயில் அருகில் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் ஜெகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த ஜெகன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார். ஜெகன் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெகனின் உறவினர்கள் மற்றும் பாஜகவினர் நேற்று பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திமுக பிரமுகரின் தூண்டுதலால் கொலை நடந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.